'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று'
'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்ற ஒரு பழமொழியை வைத்து, தத்துவார்த்தமான ஒரு முழுப் பாடலையே எழுதியுள்ளார் நமது கவிஞர் கண்ணதாசன் ! அதனால்தான் அவர் கவியரசர் ! மிக அழகான சொற்களையும் உவமைகளையும் வைத்து, எளிமையான கருத்துக்கள் கொண்ட ஒரு சொற்கட்டிடமே கட்டிவிட்டார் ! 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற அந்தப் பாடலை அறியாதவர்களே இருக்கமுடியாது அல்லவா ! அதன் அழகைச் சற்று ரசித்துப் பார்ப்போம் வாருங்களேன் !
https://www.youtube.com/watch?v=xDZMDgYdVlA
குழந்தையானாலும் சரி , தெய்வமானாலும் சரி அதை வைத்துச் சீராடி, விளையாடிக் கொண்டாடும் இடத்திலேதான் அவையும் தம் மனம் மறந்து நம்மையும் மகிழ்வித்துத் தானும் மகிழும் ! இந்தக் கருத்துக் கொண்ட பழமொழியை அடிப்படையாக வைத்து அதைத் தம் இனிய தமிழால், எளிய மொழியால் மென்மேலும் செம்மைப்படுத்தி விட்டார் கவியரசர்.
குழந்தை என்றால் என்ன என்பதை விளக்கத் தேவையில்லை. தெய்வம் என்பது அவரவர் மனம்தான் என்பது விளக்கினாலும் எளிதில் விளங்காத ஒரு தத்துவம் ! இந்த இரண்டு விஷயங்களையும் தனது எழுத்தினால் எளிமைப் படுத்தியுள்ளார் கவிஞர் இந்தப் பாடலில் !
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுபட்டதாம்! குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்றுபட்டதாம் ! சற்று ஆழப் பொருளெடுத்துப் பாருங்கள் ! குற்றங்களை மறந்துவிடும் மனம் ஒன்றிருந்தால் அதைவிடவும் மேலான தெய்வம் ஒன்று வேண்டுமா என்ன ? நடந்தவற்றை மறப்பதும் மன்னிப்பதுவும் மட்டுமே துயரங்களை அகற்றும் வழி ! இந்த வழியத்தான் குழந்தை உள்ளம் காட்டுகிறது . அந்தக் குழந்தை உள்ளத்தில் கள்ளம் இருப்பதில்லை . அது நல்ல மனம் என்ற தெய்வ சந்நிதானம் ! குழந்தை, வளரும்போது ஏற்படும் சலனங்களால் அந்த மனதில் சற்றே கலக்கம்; அந்த மாயைக்கு தெய்வமனம் சற்றே வழிவிடுகிறது. ஒருமுறை கலங்கிப் பிறகு தெளிவடைந்து விடுகிறது மனம். தெய்வமனம் திரும்பவும் அப்போது அங்கு வந்து சேருகிறது!
கதிரவனை மூடும் மேகம் போலக் கோபம், காமம் போன்ற கசடுகள் மனதை மூடியிருக்கும் வரை. 'அமைதி' என்ற தெய்வமனம் அங்கு தெரிவதில்லை; தெளிவடையும்போது தானே தெளிவு பெற்று ஒளி துலங்குகிறது !
உள்ளக் கலக்கத்தை வெளியே கொட்டிவிட்டால் , நம் மனத்தோடு நாமே பேசித் தீர்த்து விட்டால், அங்கு நேசம் பிறக்கிறது; நெஞ்சம் இனிக்கிறது !
'மாமியார் தானும் ஒரு காலத்தில் மருமகள்தானே' என்று சொல்வது போல், இன்றைய பெரியவர்களும் முன்னொருகாலத்தில் குழந்தைகளாய் இருந்தவர்கள்தாம் ! வயதிலும் உருவத்திலும் பெரியவர்களாய் இருந்தபோதிலும் தமது கசடு மிகுந்த குணங்களினால் தன்மையில் சிறியவர்களாகின்றனர். எனில், கள்ளமில்லா உள்ளம் கொண்டதால் குழந்தைகள் என்றும் தெய்வங்களாகக் கொண்டாடப்படுகின்றனர். இதுதான் வேறுபாடு !
என்றும் குழந்தைமனம் கொண்டவர்களாக நாம் இருந்துவிட்டால், நாம் வேறு, தெய்வம் வேறு அல்ல என்பதைத்தான் இந்தப் பாடலில் எளிமை புகுத்தி ஏற்றப்படுத்தியிருக்கிறார் கவியரசர் !
பாடல்:
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னாரன்று (குழந்தையும்)
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
அந்தப் பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
(குழந்தையும்)
உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது
நம் உள்ளம் என்னும் சூரியனைக் கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது (குழந்தையும்)
பிள்ளைகளாய் இருந்தவர்தான் பெரியவரானார்
அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகள் எல்லாம்
என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்
(குழந்தையும்)
---கே.பாலாஜி
19.04.2016