Tuesday, April 19, 2016

'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று'

கவியரசர் கண்ணதாசனின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்புநோக்கு - 2

 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று'


'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்ற ஒரு பழமொழியை வைத்து, தத்துவார்த்தமான ஒரு முழுப் பாடலையே எழுதியுள்ளார் நமது கவிஞர் கண்ணதாசன் ! அதனால்தான் அவர் கவியரசர் ! மிக அழகான சொற்களையும் உவமைகளையும் வைத்து,  எளிமையான கருத்துக்கள் கொண்ட ஒரு சொற்கட்டிடமே கட்டிவிட்டார் !  'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற அந்தப் பாடலை அறியாதவர்களே இருக்கமுடியாது அல்லவா ! அதன் அழகைச் சற்று ரசித்துப் பார்ப்போம் வாருங்களேன் !

https://www.youtube.com/watch?v=xDZMDgYdVlA

குழந்தையானாலும் சரி , தெய்வமானாலும் சரி அதை வைத்துச் சீராடி, விளையாடிக் கொண்டாடும் இடத்திலேதான் அவையும் தம் மனம் மறந்து நம்மையும் மகிழ்வித்துத் தானும் மகிழும் ! இந்தக் கருத்துக் கொண்ட பழமொழியை அடிப்படையாக வைத்து அதைத் தம் இனிய தமிழால், எளிய மொழியால் மென்மேலும் செம்மைப்படுத்தி விட்டார் கவியரசர்.

குழந்தை என்றால் என்ன என்பதை விளக்கத் தேவையில்லை. தெய்வம் என்பது  அவரவர் மனம்தான் என்பது விளக்கினாலும் எளிதில் விளங்காத ஒரு தத்துவம் ! இந்த இரண்டு விஷயங்களையும் தனது எழுத்தினால் எளிமைப் படுத்தியுள்ளார்  கவிஞர் இந்தப் பாடலில் !

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுபட்டதாம்! குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்றுபட்டதாம் ! சற்று ஆழப் பொருளெடுத்துப் பாருங்கள் ! குற்றங்களை மறந்துவிடும் மனம் ஒன்றிருந்தால் அதைவிடவும் மேலான தெய்வம் ஒன்று வேண்டுமா என்ன ? நடந்தவற்றை மறப்பதும் மன்னிப்பதுவும் மட்டுமே துயரங்களை அகற்றும் வழி ! இந்த வழியத்தான் குழந்தை உள்ளம் காட்டுகிறது . அந்தக் குழந்தை உள்ளத்தில் கள்ளம் இருப்பதில்லை . அது நல்ல மனம் என்ற தெய்வ சந்நிதானம் ! குழந்தை, வளரும்போது ஏற்படும் சலனங்களால் அந்த மனதில் சற்றே கலக்கம்; அந்த மாயைக்கு தெய்வமனம் சற்றே வழிவிடுகிறது. ஒருமுறை கலங்கிப் பிறகு தெளிவடைந்து விடுகிறது மனம். தெய்வமனம் திரும்பவும் அப்போது அங்கு வந்து சேருகிறது!
கதிரவனை மூடும் மேகம் போலக் கோபம், காமம் போன்ற கசடுகள் மனதை மூடியிருக்கும் வரை. 'அமைதி' என்ற தெய்வமனம் அங்கு தெரிவதில்லை; தெளிவடையும்போது தானே தெளிவு பெற்று ஒளி துலங்குகிறது !

உள்ளக் கலக்கத்தை வெளியே கொட்டிவிட்டால் , நம் மனத்தோடு நாமே பேசித் தீர்த்து விட்டால், அங்கு நேசம் பிறக்கிறது; நெஞ்சம் இனிக்கிறது !

'மாமியார் தானும் ஒரு காலத்தில் மருமகள்தானே' என்று சொல்வது போல், இன்றைய பெரியவர்களும் முன்னொருகாலத்தில் குழந்தைகளாய் இருந்தவர்கள்தாம் ! வயதிலும் உருவத்திலும் பெரியவர்களாய் இருந்தபோதிலும் தமது கசடு மிகுந்த குணங்களினால் தன்மையில் சிறியவர்களாகின்றனர்.  எனில், கள்ளமில்லா உள்ளம் கொண்டதால் குழந்தைகள் என்றும் தெய்வங்களாகக் கொண்டாடப்படுகின்றனர்.  இதுதான் வேறுபாடு !

என்றும் குழந்தைமனம் கொண்டவர்களாக நாம் இருந்துவிட்டால், நாம் வேறு, தெய்வம் வேறு அல்ல என்பதைத்தான் இந்தப் பாடலில் எளிமை புகுத்தி ஏற்றப்படுத்தியிருக்கிறார் கவியரசர் !


பாடல்:

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னாரன்று                 (குழந்தையும்)

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
அந்தப் பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
                                                                                                (குழந்தையும்)
உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது
நம் உள்ளம் என்னும் சூரியனைக் கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது      (குழந்தையும்)

பிள்ளைகளாய் இருந்தவர்தான் பெரியவரானார்
அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகள் எல்லாம்
என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்
                                                                                                  (குழந்தையும்)


---கே.பாலாஜி
19.04.2016


நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ

கவியரசர் கண்ணதாசனின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்புநோக்கு
               
பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் !  அத்தகைய பெயர் பெற்றவர்  கவியரசர் கண்ணதாசன்!  அவரது அசரவைக்கும் வரிகளைப்  படித்து அதன் எளிமையில்ஆழ்ந்து போன நாட்கள் கணக்கிலடங்கா ! சில பாடல்களைப் படிக்கும்போது அழகான ஒன்றிரண்டு பழஞ்சொல்லோ, பாடல் வரியோ,  கவிதை நயமோ, காப்பியநயமோ,  நமது நினைவுக்கு வராமல் போகாது! அது கவிஞர்களுக்கே உரித்தான பெருமை! சலுகையும் கூட ! ஆனால் அந்த வரிகளை எந்த அளவுக்கு மேலும் மெருகும்,  அழகும், எளிமையும், ஏற்றமும் கூட்டிப் படைக்க  அவனால் இயல்கிறது என்பதே கவியின் சிறப்பு!  அந்த வகையில் கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்கள் சில, எந்தெந்தப் பழைய வரிகளை நினைவூட்டுகிறது, அந்தப் பழைய பெட்டகத்துக்கு மேலும் எந்த அளவுக்கு அவர் எளிமையும் ஏற்றமும் அளித்து நமக்குத் தருகிறார்  என்பதை அலசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்..  அல்லாது, கவியரசர் திறமையை எந்த வகையிலும் எள்ளுவதோ குறைப்படுத்துவதோ கிடையாது  எமது எண்ணம்!  நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்தத் தொடரை நேயர்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம்!

1.  "நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ" 

படம்: வாழ்க்கைப் படகு
பாடகர்: பி.பி.ஸ்ரீநிவாஸ்

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே                (நேற்று)

உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே
நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்       (நேற்று)

பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே  கனவோ  என்று  வாடினேன்  தனியே நின்று
வண்டு  போல்  வந்தாய்  இன்று  மயங்கினேன்  உன்னைக்  கண்டு
                                                                                                        (நேற்று)

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே

இந்த அருமையான வரிகளைப் படித்தால் மயங்காதவர் யாருளரோ?  காதலன், தனக்கும் தன காதலிக்கும் உண்டான உறவையும் நட்பையும் குறித்து மனம் வியந்து போற்றுகிறான் ! அன்பு கலந்த நெஞ்சங்களின் பிணைப்பைக் கண்டு வியக்கிறான் !  'நாம் ஒருவரை ஒருவர் கண்டவுடன் நீ என்னுள்ளும் நான் உன்னுள்ளும் ஆகிவிட்டோம்' என்கிறான்! இந்த அழகான வரிகளைப் படிக்கும்போது, ஒரு ஒப்புமைக்குக் 'குறுந்தொகை' கை கொடுக்கிறது.

"யாயும்  ஞாயும்  யார்  ஆகியரோ
எந்தையும்  நுந்தையும்  எம்முறைக் கேளிர்
யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்
செம்புலப்  பெயல்நீர்  போல
அன்புடை  நெஞ்சம் தாம்கலந் தனவே!"

இதன் பொருள் :
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே !

இதே கருத்தைத்தான் கவியரசர் மிக எளிமையாகக் கையாண்டிருக்கிறார் ! 'செம்மண்ணில் நீர்கலந்தாற்போல்' என்ற உவமையை, 'கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே' என்று அவர்தம்  உள்ளம் கலந்து விட்டதைக் குறிப்பிட்டு விட்டார்.

அடுத்தாற்போல், கீழ்க்கண்ட வரிகளைப் பாருங்கள் !

"உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
 விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே"

திருக்குறள் காமத்துப்பாலில் 'குறிப்பறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள குறளை மேலும் எளிமைப்படுத்திக் கவியரசர் கூறியுள்ளது விளங்கும்.

குறள் :
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

இதற்கு மு.வரதராசனார் அவர்களின்  உரை :

'யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கிமெல்லத் தனக்குள் மகிழ்வாள்'

'நோக்காக்கால்' என்ற சொல்லை நகர்த்தி, எதுகை மோனை பிறழாமலிருக்க, 'விண்ணை நான் பார்க்கும்போது' என்று பாங்குறச் சொல்லியிருக்கிறார் ! அனைத்தையும் விட, இந்தக் கருத்தை மேலும் செம்மைப்படுத்தி அடுத்த இர்ண்டு வரிகளைக் கொடுத்துள்ள அழகே அழகு !
"நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்!"

அவள்மேல் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டும் விதத்தில் 'நேரிலே பார்த்துவிட்டால் நிலவு தேய்ந்து போகுமா, பூமுகம் சிவந்து போகுமா' என்றும்  கேட்டு விடுகிறான் !

இறுதி நான்கு வரிகள் பேரழகு. மென்மேலும் கவிதையைச் செம்மைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. '

'உன் முகத்தையும் பார்த்தேன் தாமரை மலரையும் பார்த்தேன்
 கொவ்வையிதழையும் பார்த்தேன் குங்குமச் சிமிழையும் பார்த்தேன்' என்கிறான்  'உன்முன்னால் அவற்றின் சிறப்புக்கு மதிப்பில்லை' என்னும் விதத்தில். 'ஒருவேளை நான் கண்டது கனவோ என்று திகைத்து நிற்குங்காலை மலரைச் சுற்றும் வண்டைப்போல் நீ என்னைச் சுற்றி வந்து நின்றாய்'  என்று சொல்லி மகிழ்கிறான் !

இத்தனை அழகான ஒரு காதலை இவ்வளவு நேர்த்தியாக வேறு எந்தக் கவிஞனால் எழுதிவிட முடியும் ?
-----------------------------------------------------------------------------------------------------------